யாருக்கோ திடீரென
சாமிவந்தது போல்
நடுசாமத்தில் விழிப்பு வந்தது
பின்னிரவு முழுவதும்
இருமல் காரனின்
இரவு போல் நீண்டது
மாந்திரிகன் குரளிக்கு விடாது
ஏவலிட வேன்டியது போல்
முன்னாள் நினைவுகள்
படுக்கையில் புரள வைத்தன
வெளியில் வந்து விண்நோக்கினால்
முற்றத்தில் இட்ட நட்சத்திர கோலங்கள்
நடுவீட்டுக்கு வந்திருந்தது
மனிதர்கள் நடமாட்டமில்லாததால்
தெருவிளக்குகள் வெளிச்சத்தை
தனது அடியெலயெ வட்டமிட்டது
தலைவன் கோஷத்திற்கு ஏற்ப
கோஷமிடம் தொண்டர்களாய்
ஒரு நாயினை தொடர்ந்து
பல நாய்கள் தொடர் ஓலமிட்டன
ஊரில் தனியே இருக்கும் அம்மாவின் நினைவு
அலுவலகத்தில் தேங்கியிருக்கும் கோப்புகள்
மகளின் நாளையே பரீட்சை என
வால்பிடித்து வந்த நிகழ்காலத்தை
தொடர்ந்து
மேய்ச்சலுக்கு சென்ற மாடு
தன்னாகவே வீடு வந்தது போல்
தூக்கம் வந்தது